மலக்குகளின் துஆவை பெறுவோர்கள்
Thursday, January 21, 2010
இறைவனின் படைப்புகளில் மிகஅற்புதமான படைப்பு மலக்குகள் ஆவார்கள் .என்னதான் மனிதன் சிறந்த படைப்பாக இருந்தாலும் சிந்திக்கும் திறன் இருந்தாலும் இறைவனுக்கு மாறுசெய்யும் குணம் அவனிடம் அதிகமாகவே இருக்கிறது.ஆனால் மலக்குமார்கள் இறைவனின் கட்டளையை அப்படியே பின்பற்றி நடப்பவர்கள்.இறைவனுக்கு மாறுசெய்யவே தெரியாதவர்கள்.திருக்குர்ஆனில் இறைவன் இவர்களைப்பற்றி கூறும்போது தங்கள் இறைவனின் கட்டளைக்கு மாறுசெய்ய மாட்டார்கள். என வர்ணிக்கின்றான். இவர்கள் இறைவனின் வேலையாள்கள். இந்த நல்லோர்கள் நமக்காக துஆ செய்தால் எப்படி இருக்கும். மலக்குகள் நமக்காக துஆ செய்வது சாதாரண விஷயமா? அவர்களின் துஆவில் நாம் இடம்பெறுவது நமக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியமே. ஏனெனில் இறைவன் நமக்காக துஆ செய்யுமாறு கட்டளையிட்டால் மட்டுமே மலக்குகள் துஆசெய்வார்கள். தாமாக துஆ செய்ய மாட்டார்கள்.
நம் மக்கள் ஹஜ்ரத்மார்களின் துஆவில் இடம்பிடிப்பதை பாக்கியமாக?கருதி அவர்களிடம் கூனிக்குறுகி ஹஜ்ரத் எனக்காக துஆசெய்யுங்கள் என்று கொஞ்சுகிறார்கள் குழைகிறார்கள். மக்களை ஏமாற்றி வயிற்றுப்பிழைப்பு நடத்தும் தொழில் முதல்இடம் வகிக்கும் தரங்கெட்ட முரீதுகளின் துஆ தங்களுக்கு கிடைப்பதற்காக அவர்களின் காலடியில் தவமாய் தவம் இருக்கிறார்கள். இவர்களின் துஆவை அல்லாஹ் கண்டுகொள்வானா? என்பது தனிவிஷயம். ஏனெனில் இவர்கள் இணைவைப்பில் மூழ்கி முத்தெடுத்தவர்கள்.இறைவனின் பெருங்கோபத்திற்கு ஆளானவர்கள். இப்படி நாம் அடுத்தவர்களை துஆசெய்ய சொல்வதை விட மலக்குமார்களிடம் துஆசெய்ய சொன்னால் என்ன? நமக்காக துஆ செய்யும் படி மலக்குமார்களிடம் நேரிடையாக கூறமுடியுமா? முடியாது தான். ஆனால் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சில வழிமுறைகளை கூறி இவற்றை செய்பவர் மலக்குமார்களின் துஆவை பெறுபவர் என்று கூறியிருக்கிறார்கள். மலக்குகளின் துஆவை பெறும் அந்த பாக்கியவான்கள் யார் என்று பார்ப்போம்.
தர்மம் செய்பவர்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'ஒவ்வொரு நாளும் இரு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், ''அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக!'' என்று கூறுவார். மற்றொருவர் அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக்கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!'' என்று கூறுவார்கள். இதை அபூஹுரைரா (ரரி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி1442)
தர்மம் செய்பவர் கூட தான் தர்மம் செய்த பிறகு இப்படியொரு துஆவை செய்திருக்க மாட்டார். அப்படியொரு கருத்தாழமிக்க துஆவை மலக்குகள் தினம் தினம் செய்கிறார்கள். மலக்குமார்களின் துஆவை பெறவேண்டும் என்ற எண்ணத்தில் தர்மம் செய்பவர் மிகமிக குறைவு என்றே கூறவேண்டும். இக்காலகட்டத்தில் பள்ளிவாசலுக்கு ஒரு மின்விசிறியை அன்பளிப்பு செய்தால் கூட அதில் தனது பெயரை வலுக்கட்டாயமாக பொறித்து விடுகிறார்கள்.இன்னார்தான் இதை அன்பளிப்பு செய்தார் என்ற முகஸ்துதிக்காகவே இவ்வாறு செய்கிறார்கள். இதை தவிர்த்து தூயஎண்ணத்துடன் செய்தால்மட்டுமே மலக்குமார்களின் துஆவை பெறமுடியும். தர்மம் என்றவுடன் இது செல்வந்தர்கள் சம்பந்தபட்ட விஷயம் என்று ஒதுங்கிக் கொள்ளக்கூடாது. தர்மம் செய்யப்படும் பொருள் முக்கியமல்ல.தர்மம் செய்வதே முக்கியம் என்பதால் நம்மால் முடிந்ததை நாம் தர்மம் செய்யவேண்டும். தர்மம் செய்ய முடிந்தும் செய்யாமல் இருப்பவர்கள் மலக்குமார்களின் சாபத்தை அஞ்சிக்கொள்ளட்டும்.
தொழுத இடத்தில் அமருபவர்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தமது வீட்டில் தொழுவதைவிடவும், தமது கடைத் தெருவில் தொழுவதை விடவும் 'ஜமாஅத்துடன் (கூட்டுத் தொழுகை) தொழுவது, மதிப்பில் இருபத்தி ஐந்து (மடங்குகள் தொழுகைகள்) கூடுதலாகும். ஏனெனில், உங்கüல் ஒருவர் அங்கசுத்தி (உளூ) செய்து, அதை செம்மையாகச் செய்து, தொழுகின்ற ஒரே நோக்கத்துடன் பள்ü வாசலுக்கு வந்தால் அவர் பள்ü வாசலுக்குள் வரும் வரை எடுத்துவைக்கும் ஒவ்வோர் எட்டுக்கும் ஓர் அந்தஸ்த்தை அவருக்கு அல்லாஹ் உயர்த்துகின்றான்; ஒரு பாவத்தை அவரை விட்டு நீக்குகின்றான். (கூட்டுத்) தொழுகையை எதிர்ப்பார்த்து அவர் பள்üவாசலில் இருக்கும்போது அவர் தொழுதுகொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார். மேலும் அவர் (வெüயேறிவிடாமல்) எந்த இடத்தில தொழுகின்றாரோ அந்த இடத்திலேயே இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிராத்தனை செய்கிறார்கள். ஆனால், (அங்கசுத்தியை அகற்றிவிடக் கூடிய) சிறுதுடக்கு (காற்றுப்பிரிதல் மூலம்) அவர் பள்üக்குள் உபத்திரவம் செய்யாமல் இருக்க வேண்டும்.. அப்போது வானவர்கள், ''இறைவா! இவருக்கு கருணை புரிவாயாக! என்றுபிரார்த்திக்கின்றார்கள்
(புகாரி477)
பள்ளிவாசல் தொழுகைக்கு வரும் நபர்களை பார்ப்பதே அரிது எனும்போது தொழுகை முடிந்தவுடன் யாரை பார்க்கமுடியும். வந்தநபர்களில் பலர் ஸலாம் கொடுத்து முடித்தவுடன் புள்ளிமான் துள்ளி ஓடுவதைப்போல ஓடிவிடுகிறார்கள். சிறிது நேரம் தொழுத இடத்தில் அமருவதினால் மலக்குமார்களின் துஆவைப் பெறலாம் என்பது நமக்கு கிடைத்திருக்கும் ஒரு அரிய வாய்ப்பு ஆகும். இதை பயன்படுத்திட தவறக்கூடாது.
தொழுகையை எதிர்பார்த்து இருப்பவர்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்து வீற்றிருக்கும்வரை அவர் தொழுதுகொண்டிருப் பவராகவே கருதப்படுகிறார்; அவருக்குச் சிறு துடக்கு ஏற்படாமல் இருந்தால். அப்போது அவருக்காக வானவர்கள், ''இறைவா! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இறைவா! இவருக்குக் கருணை புரிவாயாக!'' என்று பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை அபூஹுரைரா (ரரி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்1178)
இந்த காரியம் மலக்குமார்களின் துஆவை பெற்றுத் தருவதோடு இன்னும் பல நன்மைகளையும் அள்ளித் தருகிறது. ஒரே கல்ல் இரண்டு மாங்காய் என்பது போல இந்த ஒரே செயல்மூலமாக பலநன்மைகளை அள்ளிவிடலாம்.இதோ நபிகள் நாயகம் கூறுவதைப் பாருங்கள்.
அபூஹுரைரா (ரரி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?'' என்று கேட்டார்கள். மக்கள், ''ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''(அவை:) சிரமமான சூழ்நிலைகளிலும் அங்கத் தூய்மையை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்துவைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்தத் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவைதாம் கட்டுப்பாடுகளாகும்'' என்று கூறினார்கள்.
(முஸ்லிம் 421)
பிறருக்கு துஆ செய்பவர்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்தித்தால், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர், ''ஆமீன் (இறைவா! ஏற்றுக்கொள்வாயாக) அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும்!'' என்று கூறுகிறார். இதை என் தலைவர் (அபுத்தர்தா) என்னிடம் கூறினார் என (அபுத்தர்தா (ரரி) அவர்களின் மனைவி) உம்முத் தர்தா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்5280)
ஸஃப்வான் பின் அப்தில்லாஹ் பின் ஸஃப்வான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: தர்தா (ரஹ்) அவர்கள் ஸஃப்வான் (ரஹ்) அவர்களின் மனைவியாக இருந்தார் (என்பது குறிப்பிடத் தக்கது). ஸஃப்வான் கூறுகிறார்: நான் ஷாம் (சிரியா) நாட்டுக்குச் சென்றபோது (என் மனைவியின் தந்தை) அபுத்தர்தா (ரரி) அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அங்கு அவரைக் காண முடியவில்லை. (என் மனைவியின் தாய்) உம்முத் தர்தா (ரஹ்) அவர்களைக் கண்டேன். அவர் என்னிடம், ''இந்த ஆண்டில் நீங்கள் ஹஜ்ஜுக்குச் செல்ல நாடியுள்ளீர்களா?'' என்று கேட்டார். நான் ''ஆம்'' என்றேன். அதற்கு அவர் சொன்னார்: அவ்வாறாயின் எங்கள் நலனுக்காகவும் பிரார்த்தியுங்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், ''ஒரு முஸ்லிம் கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகச் செய்யும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. அந்த முஸ்லிமின் தலைக்கருகில் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர் ஒருவர் உள்ளார். அந்த முஸ்லிம் தம் சகோதரருக்காக நன்மை வேண்டிப் பிரார்த்திக்கும்போதெல்லாம், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அந்த வானவர், 'இறைவா! (இவருடைய பிரார்த்தனையை) ஏற்றுக்கொள்வாயாக! அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும் எனப் பிரார்த்திக்கிறார்'' என்று கூறினார்கள்.
(முஸ்லிம்5281)
தொழுகைக்கு முந்தி வருபவர்
முதல் வரிசையில் இருப்பவர்களின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான்.மலக்குகள் இறைவனிடம்(அவர்களுக்காக)அருள் வேண்டுகிறார்கள்.என நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள் இதை பராஃ பின் ஆஸிப் அறிவிக்கின்றார்கள்
நூல்:(நஸயீ 642)
வலது ஸஃப்பில் இருப்பவர்
வலது வரிசையில் இருப்பவர்களின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான்.மலக்குகள் இறைவனிடம்(அவர்களுக்காக)அருள் வேண்டுகிறார்கள்.என நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள் இதை ஆயிஷா(ர)அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்:(அபூதாவூத்578)
நோயாளியை நலம் விசாரிப்பவர்
யார் தனது சகோதரரை நலம் விசாரிப்பதற்காக செல்கிறாரோ அங்கே சென்று அமரும்வரை அவர் சொர்க்கச்சோலைகளிலே நடக்கிறார்.(அவரிடம்)அமரும் போது (இறைவனின்)அருள் அவரை சூழ்ந்து கொள்ளும்.(அது)காலையாக இருந்தால் மாலைவரை அவருக்காக எழுபதாயிரம் மலக்குகள் பிரார்த்திக்கிறார்கள்.மாலையாக இருந்தால் காலைவரை எழுபதாயிரம் மலக்குகள் பிரார்த்திக்கிறார்கள் என நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் கூறினார்கள்.இதை அலீ(ர)அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(இப்னுமாஜா 1432)
மேற்கூறப்பட்ட அனைத்திலும் நாம் மிகவும் பின் தங்கியிருக்கிறோம். மலக்குமார்களின துஆவை பெற்று இறைவனின் மன்னிப்பையும் அருளையும் அடைந்து விடக்கூடாது என்பதற்காகவே ஷைத்தான் இவைகளை செய்யவிடாமல் தடுக்கின்றான். நமக்கெதிரான சூழ்ச்சிவலையை பின்னுகின்றான்.அவைகளை அறுத்தெறிந்து இக்காரியங்கள் மூலம் இறைவனது அருளை பெறுவோமாக.
0 comments:
Post a Comment